தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை அவதூறாகப் பேசியதாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜலட்சுமி என்ற அதிமுக பிரமுகர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சமீபத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் சசிகலா குறித்தும் அவதூறாக உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் அநாகரிகமான முறையில் பேசி இருக்கிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.